search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நெல் விதைகள்"

    • குறைதீர்க்கும் கூட்டத்தில் அதிகாரிகள் தகவல்
    • 25 சதவீதங்கள் மட்டுமே வேளாண் துறை மூலம் வழங்கப்படும்.

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் இன்று நடந்தது. கூட்டத்தில் விவசாயிகளிடமிருந்து கோரிக்கை மனுக்களை கலெக்டர் ஸ்ரீதர் பெற்றுக்கொண்டார். இதைத்தொடர்ந்து விவசாயிகள் கூறியதாவது:-

    குமரி மாவட்டம் முழுவதும் தற்பொழுது சாகுபடி பணியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகிறார்கள். சுசீந்திரம், பறக்கை உட்பட பல்வேறு பகுதிகளில் சாகுபடி பணி தொடங்கப்பட்டுள்ளது. ஆனால் பல்வேறு இடங்களில் விதை நெல் தட்டுப்பாடு உள்ளது.

    உழவர் செயலி மூலம் தகவலை தெரிந்து கொள்ளலாம் என்றால் விதை நெல் இருப்பு இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு தேவையான விதை நெல் தங்கு தடை இன்றி வழங்க வேளாண் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்பொழுது பொன்மணி, திருப்பதிசாரம் 3 விதை நெல்கள் பயிர் செய்யப்பட்டு வருகிறது. ஆனால் பொன்மணி ரக நெல்லை இனி பயிர் செய்தால் காலதாமதம் ஏற்படும். எனவே திருப்பதி சாரம் 3 ரக நெல்லை விவசாயிகளுக்கு உடனடியாக வழங்க வேண்டும்.

    விவசாயம் நாளுக்கு நாள் அழிந்து வருகிறது. தாழக்குடி உள்ளிட்ட பகுதிகளில் விளை நிலங்கள் பிளாட்டுகளாக மாற்றப்பட்டுள்ளன. திருப்பதி சாரத்திலுள்ள வேளாண் விதை மையத்தில் 12 ஏக்கர் நிலம் தரிசாக போடப்பட்டுள்ளது. அதிகாரிகள் அதை பயன்படுத்தாவிட்டால் விவசாயிகளுக்கு அந்த விதை பண்ணையை குத்தகைக்கு வழங்க வேண்டும். அதில் விவசாயிகள் பயிர் செய்வார்கள்.

    செண்பகராமன்புதூர் பகுதியில் தென்னை மேம்பாட்டு கழகம் பல ஆண்டுகளாக மூடப்பட்ட நிலையில் காணப்படுகிறது. அதை செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    இதற்கு பதில் அளித்து அதிகாரிகள் கூறியதாவது:-

    குமரி மாவட்டத்தில் தற்போது பொன்மணி, திருப்பதி சாரம் 3 ரக நெல்கள் தட்டுப்பாடு இன்றி வழங்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு 2-வது பருவத்தில் 5,845 ஹெக்டேரில் சாகுபடி செய்ய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதில் 25 சதவீதங்கள் மட்டுமே வேளாண் துறை மூலம் வழங்கப்படும். மீதமுள்ள விதை நெல்களை விவசாயிகளே தயார் செய்து விடுவார்கள்.

    அதன் அடிப்படையில் தற்போது 92 டன் விதை நெல்கள் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு தேவை என்றால் சம்பந்தப்பட்ட வேளாண் துறை மூலம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    திருப்பதி சாரத்தில் 40 ஏக்கர் நிலத்தில் 10 ஏக்கர் நெல் ஆராய்ச்சி நிலையத்திற்கு ஒதுக்கப்பட்ட பிறகு 30 ஏக்கர் வேளாண் துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இதில் 17 ஏக்கர் நிலத்தில் நெல் பயிரிடப்பட்டது. இனி வரும் பருவத்தில் 31 ஏக்கரில் நெல் விதை பயிர் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • இரும்பு சத்து, நார் சத்து அதிகம் கொண்டது. சர்க்கரை நோயாளிகள், வாய் அல்சர் நோயாளிகளுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
    • விவசாயிகள் ஆதார் கார்டு நகலுடன் வேளாண் உதவி அலுவலர் பரிந்துரையில் வட்டார வேளாண்மை கிடங்குகளில் பெற்றுக் கொள்ளலாம்.

    கும்பகோணம்:

    திருப்பனந்தாள் வட்டார த்தில் முதல்முறையாக வேளாண்மை விரிவாக்க மையம் மூலம் பாரம்பரிய நெல் விதைகள் வினியோகம் செய்யப்படுவதாக வேளா ண்மை உதவிஇயக்குனர் விஜயலட்சுமி தெரிவித்து ள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    தமிழ்நாடு மாநில விதை மேம்பாட்டு முகமை திட்டத்தின் மூலம் பாரம்பரிய நெல் விதை ரகங்களான மாப்பிள்ளை சம்பா, கருடன் சம்பா, கருப்பு கவுனி ரகங்கள் 50 சதவீத மானிய விலையில் கிலோ ரூ. 12.50 விகிதம் மாப்பிள்ளை சம்பா 840 கிலோ, கருடன் சம்பா 200 கிலோ, கருப்பு கவுனி 300 கிலோ இருப்பு வைத்து விநியோகிக்கப்பட உள்ளது.

    தேவைப்படும் ஆர்வமுள்ள விவசாயிகள் ஆதார் கார்டு நகலுடன் வேளாண் உதவி அலுவலர் பரிந்துரையில் வட்டார வேளாண்மை கிடங்குகளில் பெற்றுக் கொள்ளலாம். மாப்பிள்ளை சம்பா நீண்ட கால சம்பா ரகம் 150 முதல் 160 நாள் வயது கொண்டது,

    இரும்பு சத்து, நார் சத்து அதிகம் கொண்டது. சர்க்கரை நோயாளிகள், வாய் அல்சர் நோயாளிகளுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

    கருப்பு கவுனி நீண்ட கால சம்பா பயிர் 150 நாள் வயது கொண்டது. அதிக மருத்துவ குணம் உடையது.கருடன் சம்பா, கருடன் பச்சையம் குறைவாக உள்ள அரிசி வகைகளில் ஒன்று.

    ரத்தசோகை உள்ளவர்கள் சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும், வைட்டமின் தாதுக்கள் நிறைந்த அரிசி வகையாகும்.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    • பாரம்பரிய நெல் ரகங்கள் உடல்நலத்திற்கு மிகவும் நல்லது.
    • பாரம்பரிய நெல் ரக அரிசியை உண்ணும்போது நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

    செங்கல்பட்டு:

    செங்கல்பட்டு மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் எல்.சுரேஷ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் 2021-22-ம் ஆண்டு பட்ஜெட் உரையில் அறிவித்தபடி பாரம்பரிய நெல் ரகங்கள் விதை உற்பத்தியை ஊக்குவிக்கும் பொருட்டு நெல் ஜெயராமன் பாரம்பரிய நெல் ரகங்கள் பாதுகாப்பு இயக்கம் ஆரம்பிக்கப்பட்டு தமிழகத்தில் 15 பாரம்பரிய நெல் ரகங்களின் விதைகள் தமிழகத்தில் உள்ள 33 மாநில அரசு விதை பண்ணைகளில் உற்பத்தி செய்திட திட்டமிடப்பட்டது.

    அதனை தொடர்ந்து உற்பத்தி செய்யப்பட்ட பாரம்பரிய நெல் ரகங்களை செங்கல்பட்டு மாவட்டத்தில் சாகுபடி செய்திட தூயமல்லி, மாப்பிள்ளை சம்பா, கருப்பு கவுணி, அறுபதாம் குறுவை, கொல்லன் சம்பா, செங்கல்பட்டு சிறுமணி, சிவப்பு கவுணி, கீரை சம்பா போன்ற பாரம்பரிய நெல் ரகங்களின் விதைகள் 5 மெட்ரிக் டன் அளவு மாநிலத்தில் பல்வேறு மாநில அரசு விதை பண்ணைகளில் இருந்து பெறப்பட்டு விவசாயிகளுக்கு மானிய விலையில் வினியோகம் செய்யப்பட உள்ளது.

    இந்த விதைகளானது 2022-23 ம் நிதியாண்டில் கிலோ ஒன்றுக்கு ரூ.25 நிர்ணயம் செய்யப்பட்டு விவசாயிகளுக்கு 50 சதவீத மானிய விலையில் இந்த மாவட்டத்திலுள்ள வேளாண்மை விரிவாக்க மையங்கள் மூலம் வினியோகம் செய்யப்பட உள்ளது.

    மொத்த விதையளவில் 80 சதவீதம் பொது பிரிவு விவசாயிகளுக்கும் 20 சதவீதம் பட்டியல் இன, பழங்குடியின விவசாயிகளுக்கும் வழங்கப்படும். விவசாயி ஒருவருக்கு ஏக்கர் ஒன்றுக்கு 20 கிலோ விதை மட்டுமே வழங்கப்படும்.

    கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் செயல்படுத்தப்படும் கிராம பஞ்சாயத்தை சேர்ந்த விவசாயிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட உள்ளது.

    பாரம்பரிய நெல் ரகங்கள் உடல்நலத்திற்கு மிகவும் நல்லது. ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க உதவுகிறது. உடலுக்கு வலிமை சேர்க்கும் தாதுக்கள் மற்றும் வைட்டமின்கள் உள்ளன. பாரம்பரிய நெல் ரக அரிசியை உண்ணும்போது நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். எனவே செங்கல்பட்டு மாவட்ட பாரம்பரிய நெல் சாகுபடி செய்ய விரும்பும் விவசாயிகள் தங்கள் வட்டார வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அலுவலர்கள் அல்லது வேளாண்மை விரிவாக்க மையங்களை அணுகி விதைகளை பெற்று பயனடையுங்கள்.

    இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ×